Tuesday, May 14, 2013

அஸ்ஸலாம் அலைகும் – கிருபைக்கு முன்பு சமாதானம் சாத்தியமா? (Salaam Alaikum)


நீங்கள் மசூதிக்கு சென்று இருந்தாலோ அல்லது முஸ்லிம் நண்பர்களோடு ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலோ, உங்கள் காதுகளில் "அஸ்ஸலாம் அலைகும்" என்ற வார்த்தைகள் அவ்வப்போது கேட்கும். முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பொதுவாக "அஸ்ஸலாம் அலைகும்" என்று ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். அரபி மொழி வாழ்த்துதலாகிய இதன் அர்த்தம் "உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" என்பதாகும். ஒருவர் இப்படி வாழ்த்தும் போது, இதற்கு மறுமொழியாக "வா அலைகும் அஸ்ஸலாம் (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்)" என்று கூறுவார்கள். ஒருவரை பார்க்கும் போது கூறப்படும் இந்த வாழ்த்துதலை நாம் சிந்தித்தால், கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாமுக்கும் இடையே இருக்கும் ஒரு ஆன்மீக எதிர்மறையை காணலாம். ஒருவர் மீது சாந்தியை கூறும் வாழ்த்துதல்களை நாம் மேலோட்டமாக கவனித்தால், கிறிஸ்தவமும், இஸ்லாமும் ஒன்று போலவே காணப்படும், ஆனால், ஆழமாக ஆய்வு செய்தால், என்னென்ன விஷயங்கள் வெளியே வரும்? அவைகளை இப்போது காண்போம்.
ஒருவர் கூர்ந்து கவனித்தால், இயேசு சமாதானத்தை கொண்டுவந்தார் (யோவான் 16:33) என்பதை கண்டுபிடிக்கலாம். எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் பற்றி பவுல் கூறுகிறார் (பிலிப்பியர் 4:7). மேலும் "சலாம்" என்ற மூல அரபி வார்த்தையிலிருந்து "இஸ்லாம்" என்ற வார்த்தை வந்தது என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். இஸ்லாம் என்றால் "சமர்ப்பித்தல்" என்று அர்த்தம் இருந்தாலும், மூல வார்த்தையானது "சமாதானம்" என்று இருப்பதினால், "இஸ்லாம்" என்றால் "சமாதானம்" என்றும் கூட நாம் அர்த்தம் கொள்ளலாம் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள். நாம் இப்படி கூறும்போது, உடனே சிலர் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா?" என்ற தலைப்பு பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இந்த தளத்தின் ஆசிரியர் அப்படிப்பட்ட உரையாடல் பக்கம் செல்ல விரும்புவதில்லை. இக்கட்டுரையின் தலைப்பிற்கு வெளியே செல்லாமல் ஆய்வு செய்தால், இன்னும் அதிகமான சத்தியங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது நாம் இருவரும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நிற்கிறோம், அதாவது கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும், இயேசு கூட இஸ்லாமிய முறையிலான வாழ்த்துதலை கூறினார் (யோவான் 20:21), எனவே இயேசு கூட ஒரு முஸ்லிம் தான் என்றுச் சொல்லி முஸ்லிம்கள் உடனே பதில் சொல்வார்கள்[1].
இந்த குழப்பத்தை தீர்க்க நாம் "பைபிளில் எப்படி வாழ்த்துதல்கள் கூறப்பட்டது" என்பதைப் பற்றி ஆழமாக சிந்திப்போம். அப்போஸ்தலர் பவுல் அனேக கடிதங்களை எழுதியுள்ளார், இந்த கடிதங்களில் அனேக முறை வாழ்த்துதல்கள் கூறப்பட்டு இருக்கும். இதைப் பற்றி அறிய, 1 கொரிந்தியர் 1:3, ரோமர் 1:7 அல்லது கலாத்தியர் 1:3ம் வசனங்களை கவனிக்கலாம். இவைகளில் எந்த வகையான ஒரு வாழ்த்துதல் பாணி பின்பற்றப்பட்டுள்ளது? அல்லது அப்போஸ்தலர் பேதுரு எப்படி வாழ்த்துதல்களை கூறுகிறார் என்பதை 1 பேதுரு 1:2 அல்லது 2 பேதுரு 1:2ம் வசனங்களை கவனிக்கலாம். மேலும் அப்போஸ்தலர் யோவான் எப்படி வாழ்த்துதல்கள் கூறுகிறார் என்பதை 1 யோவான் 3 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 1:4ம் வசனங்களில் நாம் காணலாம். பைபிளில் மொத்தம் 17முறை வாழ்த்துதல்கள் கூறும் போது "கிருபையும் சமாதானமும்" என்று கூட்டாக சொல்லப்பட்டுள்ளது. இந்த 17 முறையையும் நாம் கவனித்தால், முதலாவது "கிருபையும்" அதற்கு அடுத்ததாக "சமாதானமும்" வருவதை நாம் காணமுடியும். அதாவது சமாதானத்திற்கு முன்பு கிருபை தவறாமல் வருகிறது. ஒரு இடத்திலும் முதலாவது "சமாதானம்" வந்து அதன் பிறகு "கிருபை" வரவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.
இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது, அதாவது கிருபைக்கு முன்பாக சமாதானம் வர வாய்ப்பு இருக்கின்றதா? பிலிப்பியருக்கு எழுதின கடிதத்தில் சமாதானம் பற்றி சொல்லப்படுகின்றது. அதாவது எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் எப்படி வருகிறது? நாம் சந்தோஷமாக இருந்து, ஜெபத்திலும், வேண்டுதலிலும், கர்த்தருக்கு நன்றி சொல்வதிலும் தரிந்து இருந்தால், இப்படிப்பட்ட சமாதானம் வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் ஏன் இதனை செய்கிறோம் என்று கேள்வி கேட்டால், கர்த்தர் தம்முடைய கிருபையினாலே நம்மை தம்மிடம் அழைத்துள்ளார் என்பதை முதலாவது நாம் கவனிக்கவேண்டும். யோவான் 16:33ம் வசனத்தில் இயேசு கூறிய சமாதானத்தின் பின்னணி இதுவாகும். அதாவது, இயேசு நமக்கு சமாதானம் கொடுத்துள்ளார், ஏனென்றால், அவர் உலகத்தை ஜெயித்துள்ளார், மேலும் தம் சீடர்களுக்கு "தாம் யார்" என்பதை வெளிப்படுத்தியுள்ளார், இதனால் தான் தனக்கு சமாதானத்தை கொடுக்கும் உரிமை உண்டு என்பதை விளக்குகிறார். தம்மை நம்பும் விசுவாசிகளுக்கு கிருபையை கொடுக்கும் படியாக, அவரே மூலகாரணமாக இருக்கும்படியாக பிதாவினிடத்தில் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் சமாதானத்தை விசுவாசிகளுக்கு கொடுக்கிறார்.
ஆக, இப்போது அதே கேள்வி மறுபடியும் கேட்கப்படுகின்றது, அதாவது கிருபை இல்லாமல் சமாதானம் உண்டாக முடியுமா? இயேசுக் கிறிஸ்து மூலமாக தேவன் கொடுத்த ஒப்புறவாகுதலை மனிதன் ஏற்றுக்கொள்ளாதவரை அவனுக்கும் தேவனுக்கும் இடையே "சமாதானம்" இருக்க சாத்தியம் இல்லை. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நிலவும் "இந்த சமாதானம்" என்பது மனிதனுடைய செயல்களினால் உண்டாவதில்லை, அது கிருபையினால் உண்டாகிறது (எபேசியர் 2:8-9). தேவனோடுள்ள நம்முடைய உறவுமுறையும், சமாதானமும் தேவனுடைய கிருபையின் மூலமாகவே வருகிறது. மனிதர்களுக்கு இடையே, குழுக்களுக்கு இடையே அல்லது நாடுகளுக்கு இடையே நாம் தற்காலிகமாக சமாதானத்தை உண்டக்க முடியும். ஆனால், உலக சரித்திரத்தை நாம் பார்க்கும் போது, ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் நிரந்தரமாக சமாதானமாக இருந்ததில்லை. இதுமட்டுமல்ல, நம்முடைய தனிப்பட்ட அனுபவத்திலும் நாம் காணும் வண்ணமாக, நம் குடும்ப நபர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எப்போதும் சமாதானமாக இருப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. எல்லாரோடும் சமாதானமாக இருப்பது என்பது ஒரு தொடர் போராட்டமாக இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக சமாதானமாக இருக்க வேண்டுமென்றால், சில நேரங்களில் நமக்கு எதிராக தீமை செய்தவர்களை நாம் கிருபையோடு மன்னிக்க தயாராக இருக்கவேண்டும். இந்த இடத்திலும் சமாதானம் என்பது நமக்கு தீமை செய்தவர்களுக்கு சாதகமாக நாம் கிருபையை பொழிவதினால் மட்டுமே உண்டாகிறது என்பதை காணலாம்.
இயேசு ஒரு இஸ்லாமிய முறைப்படி வாழ்த்துதல்கள் கூறினார் என்றுச் சொல்லும் இஸ்லாமிய வாதங்களுக்கு பதில் என்ன? இப்படிப்பட்ட வாழ்த்துதல்களை இயேசு கூறியதாக நாம் நான்கு முறை பைபிளில் காணலாம்: அவையாவன - லூக்கா 24:36, யோவான் 20:19, யோவான் 20:21 மற்றும் யோவான் 20:26ம் வசனங்கள் ஆகும். இந்த அனைத்து வசனங்களில் காணப்படும் பொதுவான விவரம் என்ன? இவ்வசனங்களில் காணப்படும் பொதுவான விஷயம் என்னவென்றால், இந்த வாழ்த்துதல்கள் அனைத்தும், இயேசு உயிரோடு எழுத்த பிறகு கொடுத்த வாழ்த்துதல்கள் ஆகும். இந்த வாழ்த்துதல்களை இயேசு எப்போது கொடுத்தார் என்று கேட்டால், அவர் முதலாவது சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து, பிதாவினிடத்தில் சென்று, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே முறிந்த போய் இருந்த உறவுமுறையை சீர்படுத்திவிட்டு, அதன் பிறகு தான் "சமாதானம்" என்று வாழ்த்துதல்களை கூறுகிறார். "உங்களுக்கு சமாதானம்" என்ற இயேசுவின் வாழ்த்துதல்கள், இயேசு தம்முடைய ஊழியத்தை முடித்த பிறகு கூறுகிறார், அதாவது அவரது ஊழியத்தின் மூலமாக நாம் தேவனுடைய கிருபையை முழுவதுமாக பெற்ற பிறகு இயேசு "உங்களுக்கு சமாதானம்" என்று கூறுகிறார். மறுபடியும் இங்கும் நாம் அதே பாணியை பார்க்கிறோம், அதாவது கிருபையை தொடர்ந்து தான் சமாதானம் வருகிறது.
இந்த சிறிய உதாரணத்திலும் கூட, இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நம்மால் மறுபடியும் காணமுடியும்.சமாதானத்தை இஸ்லாம் முதலாவது இடத்தில் வைக்கிறது, அந்த சமாதானத்தை கிருபை இல்லாமல் அடைய இஸ்லாம் முயற்சிக்கிறது. ஆனால், கிறிஸ்தவத்தில் நாம் காணும் போது, சமாதானம் என்பது கிருபைக்கு பின்பே எப்போதும் வருகிறது, கிருபைக்கு முன்பு வருவதில்லை.
கிறிஸ்தவர்களாகிய நாம் இப்படியாக வாழ்த்துதல்கள் கூறலாம், அதாவது "உனக்கு கிருபை உண்டாகட்டும் – Grace be unto You" என்று நாம் கூறினால் பொருத்தமாக இருக்கும். இந்த சமயத்தில், அரபி பேசும் இஸ்லாமியர்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்வி என்னவென்றால், "உங்களுக்கு கிருபை உண்டாகட்டும்" என்ற வார்த்தைகளுக்கு நிகராக அரபியில் எப்படி கூறலாம்? ஒருவேளை இதை நாம் கூறும் போது, அதற்கு மறுமொழியாக அடுத்தவர் எப்படி பதில் சொல்லவேண்டும்? அரபி தெரிந்தவர்கள் இந்த இரண்டு வாக்கியங்களை அரபியில் சொல்ல எங்களுக்கு உதவலாமே?

குர்-ஆனும் விஞ்ஞானமும்: பீஜேவிற்கு கேள்வி - மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?



முன்னுரை:  பொதுவாக முஸ்லிம்களிடம்  "குர்-ஆன்" எப்படி வேதமாகும் என்று இதர மார்க்கத்தார்கள் கேட்டுவிட்டால் போதும், உடனே ஒரு பெரிய விஞ்ஞானி போல பேச ஆரம்பித்து விடுவார்கள். குர்-ஆனில் இந்த விஞ்ஞானம் உண்டு, அந்த கண்டுபிடிப்பு உண்டு, இந்த கண்டுபிடிப்பு சமீப காலத்தில் தான் கண்டுபிடித்தார்கள் என்று சொல்லிக்கொண்டே செல்வார்கள். ஒரு சராசரி முஸ்லிமே இந்த நிலையில் பேசினால், ஒரு முஸ்லிம் அறிஞர் எவ்வளவு பேசுவார்? இப்போது நம் இஸ்லாமிய அறிஞர் பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கவுரையிலிருந்து ஒரு விஞ்ஞான அற்புதத்தை நாம் கண்டுகளிப்போம்.
இந்த கட்டுரையை நாம் கீழ்கண்ட உபதலைப்புகளில் படிப்போம்.
1)       நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு
2)       7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய விஞ்ஞானம். பீஜே அவர்களின் விளக்கம்.
3)       இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?
4)       பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை உலுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்
5)       குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை
6)       முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமியவாதிகளின் கண்டுபிடிப்பு தான்.

பீஜேவிற்கு கேள்வி: மரியாள் இயேசுவை நீருக்குள் பெற்றெடுத்தார்களா?
1)      நீருக்குள் பிரசவம் – நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு
சமீப காலமாக நீருக்குள் பிரசவம் என்பது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. நீருக்குள் பிரசவம் நடைப்பெறும் போது பிரசவ வலி குறையும் என்பது ஒரு நன்மையாகும். ஆனால், தாய்க்கும், பிள்ளைக்கும் ஆபத்துக்கள் இதன் மூலம் அதிகமாக ஏற்படலாம், பிறந்தவுடன் நீருக்குள் மூச்சு திணறி குழந்தை மரிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான தாய், நார்மல் பிரசவம் நடைப்பெறும் என்று மருத்துவர்களால் எதிர்ப்பார்க்கப்படும் பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும், ஆனால், பிரசவத்தின் போது எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு விட்டால், தாய் மற்றும் குழந்தையின் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும், உயிருக்கு ஆபத்தாக முடியும்.
இந்த கட்டுரையின் நோக்கம், நீருக்குள் பிரசவம் என்பது நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி ஆய்வு செய்வதல்ல, எனவே, இந்த விஞ்ஞான விரவம் தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி சில விவரங்களை படித்துக்கொள்ளலாம், மேலும் இணையத்தில் கிடைக்கும் விஞ்ஞான ஆய்வு மருத்துவ கட்டுரைகளையும் படித்துக்கொள்ளலாம்.
2)      7ம் நூற்றாண்டிலேலே முஹம்மதுவிற்கு வெளிப்பட்ட இன்றைய விஞ்ஞானம்.
பீஜே அவர்கள் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்கவுரையில் கீழ்கண்டவாறு எழுதுகிறார் (எண் 436 – நீருக்குள் பிரசவம்):
436. நீருக்குள் பிரசவம்
19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது
பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியாவிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தைத் தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன.
குர்-ஆன் ஒரு இறைவேதம் என்று இஸ்லாமியரல்லாதவர்கள் நம்பவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அனேக யுக்திகளை கையாளுகிறார்கள், அதில் ஒன்று இன்றைய விஞ்ஞானம் அன்றைய குர்-ஆனில் காணப்படுகின்றது என்பது பற்றியதாகும்.  இந்த வரிசையில், பீஜே அவர்கள் தன் பங்கிற்கு என்ன செய்யமுடியுமோ அதனை செய்துக்கொண்டு இருக்கிறார்.
ஒருவர் பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கவுரைகள் அனைத்தையும் அவரது குர்-ஆன் தமிழாக்கத்தில் படித்தால், தொலைக்காட்சியில் விஞ்ஞான உலக செய்திகளை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு உண்டாகும். டிஸ்வரி சானல்(Discovery Channel), நாஷ்னல் ஜியாக்கிரபிக் (National Geographic channel) போன்ற விஞ்ஞான, சரித்திர, பூகோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
எப்படியாவது குர்-ஆனிலிருந்து ஏதாவது சில வசனங்களை எடுத்துக்கொண்டு, அவைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசி, "இதோ எங்கள் வேதம், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே, இன்றைய விஞ்ஞானம் பற்றி துள்ளியமாக சொல்கிறது" என்று நாகூசாமல் பொய்களை பீஜே அவர்கள் அள்ளிவிசுகிறார்.
பீஜே அவர்களின் ஒரு சில கட்டுரைகள், புத்தகங்கள், பேச்சுக்களை கேட்பவர்கள், "ஆஹா.. எவ்வளவு அருமையாக இவர் பேசுகிறார், விவரிக்கிறார்" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்டே இருந்தால், குறிப்பாக அவரது குர்-ஆன் விரிவுரைகளை முழுவதுமாக படித்தால்,
"அய்யய்யோ.. எவ்வளவு பொய்களை இவர் அள்ளி வீசுகிறார்... இதை கேள்வி கேட்க யாருமில்லியா?" என்று சொல்லத்தோன்றும்.
நான் சொல்வதை நம்பவில்லையானால், நீங்களே அவரது அனைத்து ஆக்கங்களையும், பேச்சுக்களையும், குர்-ஆன் விளக்கவுரைகளையும் படித்துப் பாருங்கள்.
ஆக, குர்-ஆன் வசனங்களுக்கு அவர் பூசிய விஞ்ஞான முலாமை இப்போது நாம் சோதிக்கப்போகிறோம். இப்போது இந்த விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட குர்-ஆன் வசனங்களை காண்போமா?
3)      இந்த குர்-ஆன் வசனங்கள் நீருக்குள் பிரசவம் பற்றி பேசுகின்றதா?
பீஜே அவர்கள் மேற்கோள் காட்டிய இரண்டு (விஞ்ஞான!) வசனங்களை அவரது மொழியாக்கத்திலிருந்து படிப்போம்.
குர்-ஆன் 19:23: பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து,அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
குர்-ஆன் 19:24: 'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
வாசர்களாகிய நீங்கள், மேற்கண்ட வசனங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துக்கொள்ளுங்கள், நாம் அவைகளை ஆராயப்போகிறோம்.
இந்த வசனத்தில் வரும் பெண், இயேசுவின் தாயாகிய மரியாள் ஆவார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது, அவர் வலி தாங்க முடியாதவராக "நான் இதற்கு முன்பே செத்து போய் இருக்கலாமே" என்றுச் சொல்லி வேதனையடைகிறார்.  அப்போது அங்கே ஒரு ஊற்றை அல்லாஹ் உருவாக்கினார் என்றும், அதைப் பற்றி மரியாளுக்கு அறிவிக்கப்பட்டது என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன.
விஞ்ஞான வசனம் குர்-ஆன் 19:24: மேற்கண்ட இரண்டு வசனங்களை படித்தால், "ஆம், பீஜே  சொல்வது சரி தான், பிரசவ வேதனையுள்ள ஒரு பெண்ணுக்காக ஒரு ஊற்றை அல்லாஹ் உருவாக்குகிறான் என்றால் (19:24), கிட்டத்தட்ட பீஜே சொன்னது போல் அல்லவா இது இருக்கிறது" என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும்.
ஆனால், இப்படிப்பட்ட விளக்கவுரை, அனேக பிரச்சனைகளை உருவாக்குகிறது, அவைகளுக்கு பதில் தர பீஜே அவர்களால் முடியுமா? இவ்வசனங்கள் உண்மையாகவே நீருக்குள் பிரசவம் பற்றி தான்  பேசுகின்றதா?
இவைகளை இப்போது விளக்குவோம்.
4)      பிரசவ வலியாள் துடிக்கும் பெண்ணை, பேரிச்ச மரத்தின் அடிபாகத்தை உளுக்கும் படி அறிவுரை கூறிய அல்லாஹ்
குர்-ஆன் 19ம் அதிகாரம், 23, 24 வசனங்கள் முழு விவரங்களையும் சொல்லவில்லை. பிரசவ வலியால் துடிக்கும் மரியாளுக்கு உண்மையாகவே அல்லாஹ் என்ன சொல்லவருகிறார் என்று அறிய இன்னும் 3 வசனங்களை நாம் சேர்த்து படிக்கவேண்டும். குர்-ஆன் 19:22 லிருந்து 26 வரையுள்ள வசனங்களை படிப்போம். விஞ்ஞானம் உள்ளது என்று பீஜே அவர்கள் குறிப்பிட்டது 23, 24 வசனங்களையாகும்.
பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.(குர்-ஆன் 19:22)  
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்துஅடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந் திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.(குர்-ஆன் 19:23)   
'கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தி யுள்ளான்என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். (குர்-ஆன் 19:24)
'பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்' (என்றார்) (குர்-ஆன் 19:25)
நீர்உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் 'நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்என்று கூறுவாயாக! (குர்-ஆன் 19:26)
மேற்கண்ட ஐந்து வசனங்களை படித்துவிட்டு, இப்போது சொல்லுங்கள், இந்த வசனங்கள் நீருக்குள் பிரசவம் என்ற நவீன விஞ்ஞானம் பற்றி பேசுகின்றதா?
 இவ்வசனங்களின் சுருக்கம் இது தான்:
1)       மரியாள் கருவுற்ற கருவுடன் தூரமான இடத்திற்குச் செல்கிறார்.
2)       பிரசவ நேரம் வந்த போது, பிரசவ வலியால் துடிக்கிறார், வலியின் வேதனையை தாங்க முடியாமல், தான் இதற்கு முன்பே மரித்துப்போய் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சொல்கிறார்.
3)       அல்லாஹ் ஒர் நீருற்றை ஏற்படுத்துகிறார், அதே போல, பேரிச்ச மரத்தை உலுக்குபடி கேட்டுக்கொள்கிறார்.
4)       பிறகு, அல்லாஹ் மரியாளிடம் நீரை குடித்து, பேரிச்ச பழங்களை சாப்பிடு என்றுச் சொல்கிறார்.
இது தான் அவ்வசனங்கள் சொல்லும் விவரங்கள். குடிப்பதற்காக தண்ணிரும், சாப்பிடுவதற்காக பேரிச்ச பழங்களையும் இருக்கின்றன என்று அவருக்கு சொல்லப்படுகின்றது. ஆனால், பீஜே அவர்கள் முழு பூசணிக்காயை அப்படியே மறைத்துவிட்டு, அந்த நீருற்று என்பது மரியாளுக்காகத் தான் அதுவும், மரியாளுடைய பிரசவ வலியை நீக்குவதற்கு அல்லாஹ் உருவாக்கியது என்கிறார். மரியாள் அந்த நீருற்றில் இறங்கினால், அவரின் வேதனை குறையும் என்று தன் சொந்த விரிவுரையை இவர் கூறுகிறார். பீஜே அவர்கள் தன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்றும், இவர் சொல்வதை அப்படியே நம்பிவிடுவார்கள் என்றும் நம்பிக்கொண்டு இருக்கிறார்.
இந்த குர்-ஆன் வசனங்களில் அனேக சிக்கல்கள், தவறுகள் உள்ளன. அவைகளை இப்போது காண்போம். பீஜே அவர்களோ, அல்லது இதர இஸ்லாமியர்களோ, தங்கள் விஞ்ஞான அறிவை பயன்படுத்தி இந்த சிக்கல்களை அவிழ்க்கட்டும்.
1)       பிரசவ வேதனை அடைந்து, துக்கிக்கும் ஒரு பெண்ணிடம் போய், நீ பேரிச்ச மரத்தின் அடியை பிடித்து உலுக்கு அது உனக்கு பழங்களைத் தரும், நீ சாப்பிடலாம் என்று அறிவுள்ள மனிதன் எவனாவது கூறுவானா?
2)       பசியால் துடிக்கும் ஒரு  பெண்ணிடம் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால், பிரசவ வேதனை என்பது மிகவும் கொடுமையானது என்றுச் சொல்வார்கள், பெண்கள் படும் பாடுகள் மிகவும் அதிகம், அதனை நம் குடும்பங்களில் நாம் கண்டுள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பேரிச்ச மரத்தை உலுக்கு என்றுச் சொல்வது அறிவுடமையாக தெரிகின்றதா?
3)       இப்படிப்பட்ட அறிவுரையை கூறுபவன் ஒரு இறைவனா? இது நடைமுறையில் சாத்தியமா?
4)       ஒரு நீருற்றை அற்புதமாக ஏற்படுத்திக்கொடுத்த அல்லாஹ், ஏன் காற்றை அனுப்பி பேரிச்ச பழங்கள் கீழே உதிர வைத்திருக்கக்கூடாது? ஒரு நிறை மாத கர்ப்பிணி, அதிலும் பிரசவத்தின் வலியால் துடிக்கும் பெண்ணிடம் சாப்பாடு பற்றியா பேசுவது?  மரியாள் தனக்கு பசிக்கிறது, சாப்பாடு தாருங்கள் என்று கூறினாரா? இல்லையே! அல்லாஹ் எப்படி வலியால் துடிக்கும் பெண்ணிடம் சாப்பாடு சாப்பிடு என்றுச் சொல்கிறார்?அதுவும், பேரிச்ச மரத்தை உலுக்கும் படி கேட்கிறார்? மரியாள் என்ன அந்த காலத்து கர்னம் மல்லேஸ்வரியா? பேரிச்ச மரத்தை உலுக்குவதற்கு? ஒருவேளை கர்னம் மல்லேஸ்வரியாக இருந்தாலும், பிரசவ வேதனை கொடுமையாக இருக்கும் போது, இப்படி மரத்தை பிடித்து உலுக்க முடியுமா என்பது தான் கேள்வி? அல்லாஹ்வின் ஞானம் எவ்வளவு தரம் குறைந்து காணப்படுகின்றது என்பதை பாருங்கள்.
5)       மேலும், ஆரம்ப காலத்திலே மரியாளுக்கு அல்லாஹ் அற்புதமாக சாப்பாட்டை கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறது:
குர்-ஆன் 3:37 அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, ''மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.
சாதாரணமாக மரியாள் இருக்கும் போது, தானாகவே உணவை கொடுத்த அல்லாஹ், ஒரு கர்ப்பிணியாக இருந்து பிரசவ வேதனை அடையும் போது மரத்தை உலுக்கச் சொல்வது வேடிக்கையாக உள்ளது.
இன்னும் அனேக சிக்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம். யாராவது மேலதிக விவரங்கள் கேட்டால், அப்போது அவைகளை தனிக் கட்டுரையாக காண்போம்.
இப்போது விஞ்ஞானம் பற்றிய விவரத்திற்கு வருவோம்.
5.       குர்-ஆனில் விஞ்ஞானம் என்ற மாயவலை
இதுவரை நாம் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்ற கருத்தில் பீஜே அவர்கள்   கொடுத்த விளக்கத்தையும், அந்த விளக்கம் எப்படி அடிப்படையற்றது என்பதையும் கண்டோம்.  குர்-ஆன் சொல்லாத ஒன்றை பீஜே போன்றவர்கள் சுயமாக கற்பனை செய்துக்கொண்டு விளக்குகிறார்கள், அல்லது மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.
இந்த விளக்கத்தை கொடுத்த பீஜே அவர்கள் உண்மையில் எதனை முடிவுரையாகச் சொல்லவருகிறார்? இப்போது அதற்கான கேள்விகளைக் காண்போம், பீஜே அவர்கள் இதற்கு பதில் அளிப்பாரா?
பீஜே அவர்களுக்கு சில கேள்விகள்:
1)       பீஜே அவர்களே, உங்களின் விளக்கத்தின் படி, இயேசுவின் பிறப்பு நீருக்குள் நடந்தது என்றுச் சொல்கிறீர்களா?
2)       "ஆம்", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் தான் பெற்றெடுத்தார் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்த குர்-ஆன் வசனங்களில் இதற்கான ஆதாரங்களை காட்டுங்கள்.
3)       "இல்லை", மரியாள் இயேசுவை தண்ணீருக்குள் பெற்றெடுக்கவில்லை என்று  நீங்கள் ஒப்புக்கொண்டால், பின் ஏன் விளக்கவுரையில் இப்படி நவீன விஞ்ஞானம் என்று கதைக் கட்டி மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள்?
4)       அல்லாஹ் மரியாளுக்காக ஒரு நீருற்றை ஏற்படுத்தியது, மரியாளின் தாகத்தை தீர்ப்பதற்காகவா, அல்லது அதற்குள் இறங்கி பிரசவ வலியை குறைத்துக் கொள்வதற்காகவா?
5)       "நீர் உண்டு, பருகி" என்று 19:26ல் அல்லாஹ் சொல்வதின் அர்த்தமென்ன? "முதலில் தண்ணீர், அதன் பிறகு பேரிச்சம் பழங்கள்" என்று அல்லாஹ் அடுத்தடுத்த வசனங்களில் சொல்லி, அதன் பிறகு "நீ உண்டு பருகி" என்றுச் சொல்வதிலிருந்து, அவர் மரியாளின் பசிக்காகத்தான் நீருற்றை உண்டாக்கினார் என்பது நமக்கு புரிகின்றது அல்லவா? இங்கு விஞ்ஞானம் எங்கேயிருந்து வந்தது?
6)       நீருக்குள் பிரசவம் என்பது இன்றைய கண்டுபிடிப்பாக இருந்தாலும், அது இன்னும் முழுமைப் பெறாத ஆராய்ச்சியாகவே உள்ளது, அதில் அனேக பிரச்சனைகள் உள்ளது, அதாவது பிறக்கும் குழந்தை நீருக்குள் முச்சுத் திறணி மரிக்கும் அபாயம் உள்ளது. இப்படி இருக்க, எந்த ஒரு மருத்துவச்சியின் உதவியின்றி, இதர பெண்களின் உதவியின்றி எப்படி மரியாள் நீருக்குள் சென்று குழந்தை பெற்று இருக்கமுடியும்?
7)       இந்த வசனத்தில் அல்லாஹ் விஞ்ஞானத்தை வைத்திருந்தால், ஏன் அவர் தெளிவாகச் சொல்லவில்லை? அதாவது கீழ்கண்ட போல அவர் வசனங்களை ஏன் தெளிவாக இறக்கவில்லை?
"மரியாளே, நான் ஒரு நீருற்றை உண்டாக்கியுள்ளேன், அதில் நீ இறங்கினால், உன் பிரசவ வலி குறையும், நீ தண்ணீருக்குள்ளேயே குழந்தையை பெற்றேடு. தண்ணீர் பிரசவத்தில் உனக்கு உதவி செய்ய ஒரு பெண்ணை நான் அனுப்புகிறேன்
மேற்கண்டபடி அல்லாஹ் சொல்லியிருந்தால், இந்த நீருக்குள் பிரசவம் என்ற அறிய கண்டுபிடிப்பை, 7ம் நூற்றாண்டிலிருந்தே உலகம் பின்பற்றி இருந்திருக்குமே (நம்முடைய காலத்தில் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு கூட கிடைத்திருக்கும்). 
உண்மையில், 7ம் நூற்றாண்டிலிருந்து அல்ல, முதல் நூற்றாண்டிலிருந்தே இந்த விஞ்ஞானம் உலகிற்கு தெரியவேண்டும் என்று அல்லாஹ் நினைத்து இருந்திருந்தால், அவரால் முடிந்திருக்கும். புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவிற்கும், சீடர்களுக்கும், இதர யூதர்களுக்கும் மரியாள் சொல்லியிருந்தால், இந்த அற்புத பிரசவ யுக்தியினால் உலக பெண்கள், இத்தனை நூற்றாண்டுகளாக நன்மை பெற்று இருந்திருப்பார்கள். ஆனால், 2000 ஆண்டுகளாக, (குறைந்தபட்சம் 14 நூற்றாண்டுகளாக) இந்த அற்புதம் பற்றி அல்லாஹ் மூச்சு  விடவே இல்லை. ஏதோ பீஜே அவர்களின் புன்னியத்தினாலும், இவரைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் புன்னியத்தினாலும் இந்த அற்புதம் குர்-ஆனில் இருப்பது இப்போது தான்உலகிற்கு வெளிப்பட்டது.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமியரல்லாதவர்கள் நீருக்குள் பிரசவம் பற்றி கண்டுபிடித்த பிறகு, பீஜே போன்றவர்களுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போது மிகவும் முக்கியமான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, இவைகளை படியுங்கள், வேடிக்கை இன்னும் உச்சக்கட்டம் அடைகிறது.இவைகள் பீஜே அவர்களின் விளக்கவுரையின் விளைவுகள்:
அ) முதலாவது, நீருக்குள் பிரசவம் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பாக அல்லாஹ்வினால் மரியாளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆ) மரியாள் இந்த அறிய கண்டுபிடிப்பை உலகிற்கு சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். ஆனால், மரியாள் மட்டும் நீருக்குள் இறங்கி இயேசுவை வலியில்லாமல் பெற்றேடுத்துவிட்டார்கள்.
இ) மரியாள் மறைத்த இந்த அற்புதம் பற்றி, ஏழாம் நூற்றாண்டில் அல்லாஹ் மறுபடியும் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்தி, குர்-ஆனில் பதிவு செய்துவிட்டார்.
ஈ) 7ம் நூற்றாண்டில் அல்லாஹ் எடுத்த இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது, அதாவது, கடந்த 14 நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட அறிய கண்டுபிடிப்பு குர்-ஆனில் இருப்பது யாருக்குமே பொறிதட்டவில்லை. அதாவது, எந்த ஒரு இஸ்லாமிய அறிஞருக்கும் 1400 ஆண்டுகளாக இந்த கண்டுபிடிப்பு குர்-ஆனில் உள்ளது என்ற விஷயம் கூட தெரியாமலே போய்விட்டது.  எல்லாரும் என்ன நினைத்தார்கள் என்றால், மரியாளுக்கு குடிக்க தண்ணீரை அல்லாஹ் ஏற்படுத்தினான் என்றே எண்ணியிருந்தனர். மறுபடியும் அல்லாஹ்வின் வசனத்தை இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை.
உ) கடைசியாக, இஸ்லாமியரல்லாத விஞ்ஞானிகள் அல்லது காஃபிர்கள், சுயமாக சிந்தித்து, நீருக்குள் பிரசவம் என்பதை கண்டுபிடித்த பிறகு, பீஜே போன்றவர்களுக்கு குர்-ஆனின் உண்மை (அல்லாஹ்வினால்) வெளிப்பட்டது.
பீஜே அவர்களுக்கு இப்போது தன்னுடைய தவறு என்ன என்று புரிகிறதா? புரியவில்லையானால், புரியவைக்கும்  படி அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்ளுங்கள்.  உங்களுக்கு விளங்கினால், அடுத்த குர்-ஆன் பதிவில் அந்த விளக்க குறிப்பை நீக்கிவிடுங்கள், நீங்கள் மனசாட்சியின்  படி நேர்மையாக நடப்பவராக இருந்தால்.
6.       முடிவுரை: குர்-ஆனில் விஞ்ஞானம் என்பது நவீன இஸ்லாமியவாதிகளின் கண்டுபிடிப்பு தான்.
குர்-ஆனில் விஞ்ஞானம் என்று ஒன்றுமில்லை. இந்த கட்டுரையை  படிக்கும் வாசகர்கள் கீழ்கண்ட கட்டுரைகளையும் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
·         நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? ('குர்-ஆனில் விஞ்ஞானம்காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு)
குர்-ஆன் ஒரு வேதம் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காக, இப்படி பொய்களை இட்டுக்கட்டக்கூடாது. பீஜே அவர்களே! நீங்கள் இட்டுக்கட்டியது என்ன ஆனது, அஸ்திபாரத்தோடு இடிந்துப்போனது. உங்களைப் போன்றவர்கள் இப்படி இல்லாத ஒன்றை இருப்பது போல சொல்வது என்பது, மிகவும் கேவலமானது. இந்த கேவலம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் அல்லாஹ்விற்கும், அவனது வேதத்திற்கும், இஸ்லாமுக்கும் தான்.
ஒருவேளை இந்த கட்டுரையைக்கு யாராவது மறுப்பு எழுதினால், நான் மேலதிக விவரங்களோடு பதில் தர தயாராக இருக்கிறேன்.
வாசகர்களே, இஸ்லாமியர்கள் உங்களிடம் வந்து குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொன்னால், நம்பவேண்டாம். அவர்கள் சொல்லும் விவரங்களை சரி பார்த்து செயல்படுங்க

பீஜேவிற்கு கேள்வி: இயேசு குளோனிங் முறையில் கருத்தரிக்கப்பட்டாரா? இயேசு அல்லாஹ்வின் DNA வாக இருந்தாரா?



முன்னுரை: உலகின் மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புக்களின் விவரங்களை நாம் குர்-ஆனில் காணலாம். இது என் கூற்று அல்ல, இது இஸ்லாமிய அறிஞர்களின் நம்பிக்கை. இதற்காக, சில ஒற்றுமைகளை குர்-ஆன் வசனங்களில் காண்பித்து, "இதோ, குர்-ஆன் விஞ்ஞானம் பற்றி பேசுகிறது" என்று இஸ்லாமிய பெருமக்கள் பெருமையாக பேசிக்கொள்வார்கள். ஆனால், உண்மையில் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டா? கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி சில விவரங்களை படித்துக்கொள்ளுங்கள்.
2.       நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? ('குர்-ஆனில் விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு)
பீஜே அவர்களும் குளோனிங் முறையும்:
பீஜே அவர்கள் தன் பங்கிற்கு, குர்-ஆன் வசனங்களில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நீருக்குள் பிரசவம் என்ற தலைப்பில் இவர் விவரித்த விஞ்ஞானம் பற்றி நான் ஒரு பதிலை கொடுத்து இருந்தேன், அதனை நீங்கள் மேலே தரப்பட்ட தொடுப்பில் படிக்கலாம்.
மேலும், இயேசுவின் பிறப்பை சம்மந்தப்படுத்தி, அவர் குளோனிங் முறைப் பற்றி கொடுத்த இன்னொரு விஞ்ஞான விளக்கத்திற்கு பதிலை இப்போது காண்போம். இப்படி தனக்கு தோன்றியபடி பீஜே அவர்கள் எழுதுவதினால், சில நேரங்களில் தனக்கே தெரியாமல் இஸ்லாமை கதிகலங்க வைக்கும் சில விபரீதமான விஷயங்களையும் அவர் சொல்லிவிடுவதுண்டு. இயேசுக் கிறிஸ்து என்பவர் இறைவனின் (அல்லாஹ்வின்) DNA மரபணுவாக இருக்கிறார் என்பதை இவர் தனக்கே தெரியாமல் ஒப்புக்கொண்டுள்ளார்.
இயேசு அல்லாஹ்வின் மரபணு மூலமாக உருவாக்கப்பட்டார் என்றுச் சொன்னால், "இயேசு தான் அல்லாஹ்" என்று பொருள் வந்துவிடுகிறது. எவ்வளவு பெரிய தவறை பீஜே செய்துவிட்டார்! குர்-ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடித்தவர், உண்மையில் அஞ்ஞானியாகிவிட்டாரே! அந்தோ பரிதாபம்.
சரி, இப்போது அவரது குளோனிங் விஞ்ஞான விளக்கத்தை கவனிப்போம்.
1)      பீஜே அவர்களின் குர்-ஆன் விளக்கக் குறிப்பு: 415 – குளோனிங் சாத்தியமே!
பீஜே அவர்கள் தன் குர்-ஆன் தமிழாக்கத்தின், 415வது விளக்கத்தில் "குளோனிங் சாத்தியமே!" என்ற தலைப்பில், இயேசுவின் பிறப்பை சம்மந்தப்படுத்தி, குளோனிங் பற்றி விவரித்துள்ளார்.  இந்த விளக்கத்தில் சில விபரீதமான விஷயங்களை அவர் கூறியுள்ளார். இஸ்லாமுக்கு எதிராகவும், குர்-ஆனுக்கு விரோதமாகவும், அல்லாஹ்வின் தெய்வீகத்திற்கு (ஏகத்துவத்திற்கு)  விரோதமாகவும் அவர் கூறியுள்ளார்.  பீஜே அவர்கள் சிறிது தீர்க்கமாக சிந்தித்து இருந்திருந்தால், இப்படியெல்லாம் எழுதியிருக்கமாட்டார்.  அடுத்த குர்-ஆன் பதிப்பின் போது, அவர் இந்த தலைப்பு பற்றி சிறிது சிந்திப்பார் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.
அவர் கொடுத்த விளக்கத்தில் மிகவும் முக்கியமானவைகளை மட்டும் நான் இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.  அவரது குர்-ஆன் தமிழாக்கம் உள்ளவர்கள் இந்த 415வது குறிப்பை முழுவதுமாக  படித்துக்கொள்ளலாம், மேலும் இணையத்திலும்(http://www.onlinepj.com/) சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
//பீஜே அவர்கள் எழுதியது:
415. குளோனிங் சாத்தியமே!//
பீஜே அவர்களே, குளோனிங் சாத்தியம் தான் என்றுச் சொல்லி உங்கள் சொந்த விளக்கத்தை கொடுத்து இருந்திருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால், நீங்கள் குர்-ஆனை இதற்காக வம்புக்கு இழுத்ததாலும், இயேசுவின் பிறப்பையும் இதற்குள் நுழைத்ததாலும் இப்போது பிரச்சனையில் மாட்டியுள்ளீர்கள்.  உங்களின் விஞ்ஞான விளக்கம் எவ்வளவு பெரிய தவறாக உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறேன்.
//பீஜே அவர்கள் எழுதியது:
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித் தாய் மூலம் இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளதுஎன்றும் கூறிஇது குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.
மனிதர்கள் முயற்சி செய்தால்இது சாத்தியமாகும் என்பது இல்லாவிட்டால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது. //
இயேசுக் கிறிஸ்து ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார், இது  ஒரு அற்புதம் என்றுச் சொல்லி நீங்கள் எழுதியிருந்தால், உங்கள் மீது தவறில்லை.  ஆனால், ஒரு விஞ்ஞான முலாம் பூசி உங்கள் லாஜிக்கை இங்கே நுழைக்கப் பார்த்தீர்களே, அது தான் நீங்கள் செய்த தவறு.
"இது ஒரு அத்தாட்சியாக உள்ளது, இதைப் பற்றி சிந்தியுங்கள்" என்று குர்-ஆன் சொல்வது, மனிதர்கள் சிந்தித்து, குளோனிங் முறையை கண்டுபிடியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறார் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?
நீங்கள் சொல்வது உண்மையானால், ஏன் கடந்த 1400 ஆண்டுகளாக ஒரு இஸ்லாமியரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை? ஏன் ஒரு இஸ்லாமிய அறிஞரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை?
ஏதோ, ஒரு இஸ்லாமியரல்லாதவர் (குர்-ஆனை படிக்காமல்) சொந்தமாக சிந்தித்து ஒரு அறிய கண்டுபிடிப்பை கொண்டுவந்தால், அதை நீங்கள் சொந்தம் கொண்டாட நினைக்கிறீர்களோ?
பீஜே அவர்களே, இன்னும் நிறைய காலம் இருக்கிறது, நீங்கள் உட்கார்ந்து எங்கேயெல்லாம் குர்-ஆன் சிந்திக்கச்சொல்கிறதோ, அத்தாட்சியாக உள்ளது என்றுச் சொல்கிறதோ, அங்கேயெல்லாம் இன்னும் என்னென்ன கண்டுபிடிப்புக்களை அல்லாஹ் மறைத்துள்ளான் என்பதை ஆய்வு செய்து இன்னும் 100 ஆண்டுகளுக்குள் என்னென்ன விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உலகில் வரவேண்டுமோ, அவைகளை இப்போது சிந்தித்து உங்களால் சொல்லமுடியுமா? 
நீங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் உட்கார்ந்து (சண்டைப்போடாமல், ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளாமல்)  குர்-ஆனின் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புக்களை சிந்தித்துச் சொல்லுங்கள். இப்படி நீங்கள் செய்தால்,  உங்கள் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்பதை அப்போது ஒப்புக்கொள்கிறோம்.
//பீஜே அவர்கள் எழுதியது:
இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். . . . . . . சாதாரண குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
. . . . .
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு,எருமைபன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
மேற்கண்ட மேற்கோளில், நான் பீஜே அவர்களின் சில வரிகளை மட்டுமே கொடுத்துள்ளேன். ஏனென்றால், அவைகளில் பீஜே அவர்கள் "குளோனிங்" பற்றி ஒரு பொதுவான விவரத்தை கொடுத்துள்ளார்.
சில இடங்களில் பீஜே அவர்கள் சிறிது குழம்பியுள்ளார்கள், அதாவது "சோதனைக் குழாய் குழந்தை (Test Tube Baby)" மற்றும் "குளோனிங் முறை (Cloning)" இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை சரியாக புரிந்துக்கொள்ளாமல் எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் அவரது குழப்பம் பற்றி ஆராய்வதல்ல என்பதால், மேலதிக விளக்கத்திற்கு நான் செல்லவிரும்பவில்லை. குளோனிங் முறை என்பது மிகவும் சிக்கலான விஷயம், எனவே கீழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கி மேலதிக விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்:
1)       சோதனைக் குழாய் குழந்தை –  Test Tube Baby
2)       குளோனிங் முறை -      Cloning and Human Cloning
அடுத்ததாக, அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை பார்ப்போம்.
//பீஜே அவர்கள் எழுதியது:
மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். 25வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.//
பீஜே அவர்களே, விஞ்ஞானிகளின் கணிப்புப் படி, 25 வயதுடைய மரபணு(DNA)மூலமாக உருவாக்கப்படும் குழந்தை, 25 வயதுடைய அந்த மனிதனின் அறிவும், சிந்தனையும் கொண்டு இருக்கும்.
அதே போல, அல்லாஹ்வின் மரபணு(DNA) மூலமாக உருவாக்கப்படும் குழந்தை (இயேசுக் கிறிஸ்து) பிறக்கும் போதே, அல்லாஹ்விற்கு இருக்கும் அறிவுடனும், சிந்தனையுடனும் இருப்பார் என்றுச் சொல்லலாம் இல்லையா?
//பீஜே அவர்கள் எழுதியது:
இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்துஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால்,ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பிஅந்த வானவர்ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப் பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும்எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.
பீஜே அவர்களே, நீங்கள் விஞ்ஞானத்தை விளக்கிவிட்டு, இப்போது  குர்-ஆனுக்கு வந்துள்ளீர்கள்.
ஒன்றை சரியாக நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். இறைவன் அற்புதம் செய்தால், அது அற்புதம் தான், அதனுள் விஞ்ஞானத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், விளைவுகள் உங்களுக்கு சில நேரங்களில் சாதகமாக அமையாது.  இறைவன் "ஆகு" என்று சொல்லிவிட்டால், அவ்வளவு தான், அது உண்டாகிவிடும். மேலும இறைவன் எப்படி அற்புதம் செய்கிறார் என்பதை ஆராய்ச்சி செய்து, அதற்கு ஒரு விஞ்ஞான உடையை உடுத்த முயற்சிக்கிறீர்கள் நீங்கள்.  இதனால் உண்டான விளைவு என்ன? இப்போது காண்போம்.
2) அல்லாஹ்வின் ஆற்றலினால் உண்டான மரபணு:
வானவர் ஊதினது, மரபணு என்று உங்களுக்கு கூறியது யார்? உங்களுக்கு எப்படித் தெரியும் அது மரபணு என்று? உங்களுக்கே சந்தேகமாக இருக்கும் பொது, ஏன் இந்த வேண்டாத ஆராய்ச்சிகள்? "ஊதியிருக்கலாம்" என்ற வார்த்தையிலிருந்து உங்களுக்கே சந்தேகம் இருக்கிறது என்று தெரியவருகிறது, அப்படியிருக்கும் போது, ஏன் "குளோனிங் சாத்தியமே" என்ற விளக்கம்?
நீங்கள் அல்லாஹ்வின் ஆற்றலினால் உண்டான மரபணு என்கிறீர்கள், ஆனால், நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம், அந்த உயிர் அல்லாஹ்வினுடையது என்றுச் சொல்கிறதே!
குர்-ஆன்  21:91ஐ இப்போது படிப்போம்:
தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம் 90. அவரையும்அவரது புதல்வரையும் அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.415
மேற்கண்ட வசனத்தில், "நமக்குரிய உயிரை ஊதினோம்" என்று அல்லாஹ் சொல்கிறார்.  நீங்கள் விளக்கும் பொது, அல்லாஹ் ஒரு மரபணுவை உருவாக்கி, வானவர் மூலம் ஊதவைத்தார் என்றுச் சொல்கிறீர்கள்.  இப்போது இதனை நாம் எப்படி விளங்கிக்கொள்வது?
1)       அல்லாஹ் ஊதியது தன்னுடைய உயிரையா? அல்லது
2)       பீஜே அவர்கள் விளக்கியது போல, அவர் உருவாக்கின ஒரு மரபணுவையா?
3)       அல்லாஹ் உருவாக்கியது ஒரு மரபணு என்றுச் சொன்னால், அந்த மரபணு யாருடையது? ஏதாவது ஒரு மனிதனின் உடலிலிருந்து எடுத்த மரபணுவா? அல்லது அல்லாஹ்வின் சொந்த மரபணுவா?
4)       இல்லை, அல்லாஹ் ஊதியது ஒரு உயிர் தான், அது மரபணு அல்ல என்றுச் சொன்னால், பீஜே அவர்களின் விளக்கம் குர்-ஆனுக்கு எதிரான ஒன்றாக அமையவில்லையா? அல்லாஹ் சொல்லாத ஒன்றை பீஜே அவர்கள் சொந்தமாக இட்டுக்கட்டி கூறியதாக ஆகிவிடாதா?
இப்படி அனேக கேள்விகள் எழுகின்றன, இவைகளுக்கு பீஜே அவர்கள் விளக்கம் அளிப்பாரா?  
[மேற்கண்ட வசனத்தில், 90வது குறிப்பு ஒன்று உள்ளது, அது ஆதாமுக்குள் அல்லாஹ் ஊதிய உயிர் பற்றி பேசுகிறது. இதைப் பற்றி விவரமாக நாம் அடுத்த பதிலில் கர்த்தருக்கு சித்தமானால் காண்போம். எப்படி பீஜே அவர்களின் ஒரு விளக்கம் இன்னொரு விளக்கத்தோடு மோதுகிறது என்பதை அக்கட்டுரையில் காண்போம். ஆதாமையும் இயேசுவையும் படைத்தவிதம் ஒரே விதம் என்று குர்-ஆன் கூறுவது பற்றி விவரமாக பார்ப்போம்.]
[வானவர் ஊதிய நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட குர்-ஆன் வசனம் பற்றி  ஒரு கட்டுரையை தனியாக காண்போம். அதாவது, குர்-ஆன் வசனத்தை தமிழாக்கம் செய்யும் போது, சிலர் மரியாளின் உடைக்குள் வானவர் ஊதினார் என்று மொழியாக்கம் செய்கிறார்கள். ஆனால், மூல அரபியில் வேறு விதமாக உள்ளது. அப்படியானால், ஏன் மொழியாக்கம் செய்யும் போது இவர்கள் மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள், இதைப் பற்றி நாம் இன்னொரு புதிய கட்டுரையில் காண்போம். இப்போது இந்த கட்டுரையின் தலைப்பை விட்டு வெளியே செல்லாமல் நாம் ஆராய்வோம்]
//பீஜே அவர்கள் எழுதியது:
அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப்பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில்அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத் தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.

இறைத் தூதர் என்றால்இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும்,அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன்இறைச் செய்திகளை விளங்கிமக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.
இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50//
பீஜே அவர்களே, உங்கள் விளக்கம் பிரச்சனையை அதிகமாக்குகிறதே தவிர, இஸ்லாமை காப்பாற்றுவதாக இல்லை. உங்களின் விளக்கத்தின் படி:
1)       இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசினார்.
2)       அவரது அந்த பேச்சுத்திறமை, அவரை அல்லாஹ் எடுத்துக்கொண்டது வரை இருந்தது.
3)       குழந்தையாக இருந்த நாளிலிருந்தே, பேச்சு மட்டுமல்ல, ஒரு முதிர்ந்த இறைத்தூதர் போல  அவர் இறைச் செய்தியை புரிந்துக்கொண்டு, அதனை மக்களுக்கு விளக்கும் அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருந்தார்.
4)       உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமென்றால், நாற்பது வயதில் எப்படி முஹம்மது இருந்தாரோ, அந்த அளவிற்கு பிறந்த குழந்தையாகிய இயேசு இருந்தார், பேசினார், சிரித்தார், வாதம் புரிந்தார், இறைச் செய்தியை விளக்கினார்.
இது தான் உங்களுடைய விளக்கத்தின் சுருக்கம், இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் (ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், உங்கள் விளக்கத்தில் நீங்கள் சொன்னதின் அர்த்தமென்ன என்பதை விளக்கவும்).
பீஜே அவர்களின் விளக்கம் உண்டாக்கிய பிரச்சனைகள்:
ஏதோ விஞ்ஞானம் பற்றி எழுதவேண்டும், குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்பதை உலகத்திற்கு காட்டவேண்டும் என்ற நப்பாசையில், தனக்கு வந்தபடி எழுதியுள்ளார் பீஜே. இப்போது கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு அவர் பதில் அளிக்கட்டும்:
1)       ஒரு குழந்தை பிறந்தது முதல், இறைச்செய்தியை சொல்லி, மக்களை நல்வழிப்படுத்தினால், இது என்ன சாதாரண அற்புதமா? உலக மகா அற்புதம்.  
2)       இவ்வளவு பெரிய அற்புதத்தை, அல்லாஹ் இயேசுவிற்கு மட்டும் செய்ய முக்கிய காரணமென்ன? அனேக நபிகள் (தீர்க்கதரிசிகள்) வந்தார்கள், ஒருவருக்கும் இல்லாத ஒரு சிறப்பான அற்புதம் இயேசுவிற்கு மட்டும் செய்ய காரணம் என்ன? ஒரு காரணமும் இல்லாமல் "சும்மா செய்தேன்" என்றுச் சொல்ல அல்லாஹ் சாதாரண மனிதன் அல்லவே!
3)       ஆதாமுக்கு அப்பா இல்லை, காரணம் அவர் தான் முதல் மனிதர், எனவே அப்பா இல்லை, அல்லாஹ் மண்ணினால் அவனை படைத்தார். ஆனால், இயேசுவின் விஷயத்தில் ஏன் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அல்லாஹ் செய்யவேண்டும்? யோசேப்பு என்பவரோடு மரியாளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஒருவேளை யோசேப்பு இல்லாவிட்டாலும், வேறு ஒரு ஆணை திருமணம் செய்துக்கொண்டு, இயற்கையான முறையில் (ஆண், பெண் உறவுடன்) இயேசு பிறந்திருக்கலாம். ஏன் அல்லாஹ் ஒரு இயற்கைக்கு எதிராக இயேசுவின் விஷத்தில் செயல்பட வேண்டும்?
4)       இயேசு குழந்தையாக இருக்கும் போதே, வாலிபனான ஒரு ஆணுக்கு இருக்கும் அறிவும், சிந்தனையும்  இருக்கிறது என்று பீஜே கூறினால், இயேசு ஒரே சமயத்தில் ஒரு முதிர்ச்சியான மனிதனாகவும், அதே நேரத்தில் ஒரு குழந்தையாகவும் எப்படி அவரால் இருக்கமுடிந்தது? அதாவது தான் பிறந்து சில நாட்கள் கடந்த குட்டி இயேசு இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லிவிட்டு, மிகப்பெரிய சொற்பொழிவை  செய்துவிட்டு, மறுபடியும் தன் அம்மாவிடம் வந்து அந்த குட்டி இயேசு பால் குடித்தாரா? 
5)       குழந்தையாக இயேசு இருந்துக்கொண்டு, அல்லாஹ்வின் இறைச் செய்தியை மக்களுக்கு சொல்லிவிட்டு, அதன் பிறகு தான் படுத்திருந்த இடத்திலேயே மலஜலம் கழித்தாரா? அவரை மரியாள் சுத்தம் செய்தார்களா?
6)       நான் என்ன சொல்ல வருகிறேன்  என்று பீஜே அவர்களுக்கு புரிகின்றதா?  இயேசு பிறந்தது முதல் ஒரு இறைத்தூதராக இருந்தால், அவர் ஒரு முதிர்ச்சியடைந்த மனிதன் சிந்திப்பது போல சிந்தித்தால்,  எப்படி அவரால் குழந்தையைப் போல நடந்துக்கொள்ளமுடியும்?  அக்காலத்து மக்களுக்கும்  இது அதிக பிரச்சனையை உண்டாக்கியிருக்கும் இல்லையா?
7)       தன் நிஜாரிலேயே மலஜலம் செய்யும் ஒரு குழந்தை,  உலக மக்களுக்கு இறைச்செய்தியை சொல்லி, விவரமாக விளக்கினால், மக்கள் அதனைக் கண்டு பிரமிப்பார்கள். ஆனால், உண்மையில் வேறு சில குர்-ஆன் வசனங்களை காணும்போது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல், அவரை கொலை செய்ய முயன்றதாக காண்கிறோம். பீஜே அவர்களே, எங்கேயோ இடிக்கிறதே! உங்கள் குளோனிங் விஞ்ஞான அற்புதத்தில் ஏதோ குறைபாடு இருப்பதாக தெரிகின்றதே!
8)       இயேசு பிறந்தது முதல், வாலிபனாகும் வரைக்கும் (தோராயமாக 33 ஆண்டுகள்)  அவர் இறைத்தூதராக இருந்தால், அவர் குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதங்கள் எங்கே? ஒரு பறவையை அவர் உண்டாக்கியது ஒரு பாலகனாக இருக்கும்  போது என்றால், இதர அற்புதங்கள் பற்றி அல்லாஹ் ஏதாவது கூறியுள்ளாரா?
9)       பீஜே அவர்கள் சொன்னது போல உண்மையில் நடந்து இருந்தால், உலக வரலாறு அதனை பதிவு செய்து இருக்கும். இயேசு குழந்தையாக இருக்கும் போதே,  அக்காலத்தில் இருந்த நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருக்கும்.  அவரைக் காண பல நாடுகளிலிருந்து, ஊர்களிலிருந்து மக்கள் அலையலையாய் வந்து அவரை கண்டு இருந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் அவர் ஒரு தச்சனின் மகன் என்று தான் உலகம் அவரை அறிந்திருந்தது. எனவே, பீஜே அவர்களே, உங்களின் கூற்று மிகப்பெரிய பொய் மூட்டையாகும்.
பீஜே அவர்களே, நீங்கள் எழுதிய விளக்கம், நகைப்பிற்கு உரியது. அதில் கொஞ்சமும் சத்தும் இல்லை, சத்தியமும் இல்லை.
3) மனித குளோனிங் என்பது அல்லாஹ்விற்கு விரோதமல்லவா?
மனிதர்களை செயற்கையாக படைப்பது என்பது இறைவன் உருவாக்கிய இயற்கை முறைக்கு எதிரானதாகுமல்லவா? உலக மக்கள் பெருக்கத்திற்கு இறைவன் உண்டாக்கிய ஒரு வழிமுறை திருமணமாகும். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து, உடலுறவினால் ஒன்று சேர்ந்து, மக்களை பெறவேண்டும் என்பதாகும். ஆனால், குளோனிங் முறையினால், மனிதர்களை உண்டாக்கினால் இதனால் அனேக சமூக சீர்கேடுகள் உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. எனவே, அனேக அமைப்புக்கள், முக்கியமாக மத அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றன. குளோனிங் முறையினால் நன்மைகளை விட தீமைகள் அதிகமாக விளையும் என்று நம்பப்படுகின்றது. இவைகளையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், ஒரு மார்க்க தலைவர், இந்த குளோனிங் முறையை அல்லாஹ் தன் நபி ஒருவரின் வாழ்வில் நிகழ்த்திக்காட்டினார், எனவே, இது சாத்தியமே, மற்றும் நல்லதே என்ற தோரணையில் எழுதுகிறார். (சோதனைக் குழாய் குழந்தை என்பது வேறுவகையான ஒன்றாகும்)
பீஜே அவர்களே, ஒரு கேள்வியைக் கேட்கட்டுமா?  இதை ஒரு எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன், தவறாக நினைக்கவேண்டாம்.  இந்த குளோனிங் முறையை நீங்கள் ஆதரிப்பதாக தெரிகின்றது. ஒரு வேளை உங்கள் உடலிலிருந்து ஒரு மரபணுக்களை எடுத்து, உங்களைப் போலவே இன்னும் நான்கு பீஜேக்களை விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மேலும், விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியினால், ஒரு வருடத்திலேயே அவர்கள் உங்கள் வயதுக்கு சமமான பீஜேக்களை உருவாக்கிவிட்டால். உங்கள் நிலை என்னவாகும்? மொத்தம் 5 பீஜேக்கள் இருப்பார்கள். இந்த நான்கு குளோனிங் பீஜேக்கள், உங்கள் வீட்டிற்கு வந்து, இதோ இவன் என் மகன் என்று உங்கள் மகனை உரிமை பாராட்டுவார்கள். இதோ இவர் என் மனைவி என்று உங்கள் மனைவியை உரிமை பாராட்டுவார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இவர்கள் மீது வழக்கு தொடருவீர்களா? இவர்கள் வேறு யாருமில்லை, இவர்கள் நீங்கள் தான். நீங்கள் சொன்னதுபோல, இவர்கள் உங்கள் தற்போதையை மனைவியை தங்களின் மனைவி என்றுச் சொல்வார்கள், இது இவர்கள் மீதுள்ள குற்றமல்ல, இது தான் குளோனிங் முறை.
மனித குளோனிங் முறையினால் உண்டாகும் அனேக பிரச்சனைகளில் இது ஒரு பிரச்சனையாகும். இப்படி அனேக பிரச்சனைகள் நடைமுறையில் உண்டாகும். உங்கள் மீது எடுத்துக்காட்டு சொன்னதற்காக என்னை மன்னிக்கவும், ஆனால், உண்மை என்னவென்று உங்களுக்கு புரியவைக்கவேண்டும் என்பதால் இப்படிச் சொன்னேன்.
இப்படி சமுதாய சீர்கேடு விளைவிக்கும் ஒரு நவீன கண்டுபிடிப்பை  அல்லாஹ் அங்கீகரிப்பானா? இப்போது சொல்லுங்கள், இயேசுவின் பிறப்பு ஒரு அற்புதமா? அல்லது குளோனிங் முறை விஞ்ஞானமா?
[மறுபடியும் ஒரு சின்ன கேள்வி: உதாரணத்திற்கு உங்களைப்போல நான்கு பேரை குளோனிங் முறையில் உண்டாக்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுமை நாளில் உங்களின் தற்போதைய மனைவி, யாருக்கு மனைவியாக இருப்பார்கள், அல்லாஹ் எந்த பீஜேவிற்கு அவரை மனைவியாக தருவார், கவனத்தில் வைத்திருக்கவும், மீதமுள்ள நான்கு பீஜேக்களும் நீங்களே, உங்கள் DNA தான் அவர்களும், எனவே நீங்கள் ஐந்து பேரும் வேறு வேறு நபர்கள் அல்ல, நீங்கள் ஐந்தில் ஒன்று Five in One]
முடிவுரை: அன்பான வாசகர்களே, இஸ்லாமையும், அதன் அறிவுஜீவிகளின் விளக்கங்களை கண்டீர்களா?  குர்-ஆனும் விஞ்ஞானமும் நடைமுறையில் எப்படி ஒன்றையொன்று முரண்படுகின்றது என்பதைக் கண்டீர்களா? 
அல்லாஹ் அற்புதம் செய்தான், இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசவைத்தான் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, குளோனிங் முறைப் பற்றி குர்-ஆன்  சொல்கிறது, இயேசு அப்படித் தான் பிறந்தார் என்று பீஜே அவர்கள் அள்ளிவீசிய பொய் மூட்டைகள் அனைத்தையும் நான் அழித்துவிட்டேன்.
உண்மையாகவே, பீஜே அவர்களுக்கோ  அல்லது அவரது குழுவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கோ, குறிப்பு 415ல் சொல்லப்பட்டது போல இயேசு குளோனிங் முறையில் பிறந்தார் என்ற நம்பிக்கை இருந்தால், இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பதிலைச் சொல்லுங்கள். உங்களால் முடியாவிட்டால், அவரது குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து அடுத்த முறை, 415வது குறைப்பை நீக்கிவிடுங்கள்.
மேலும், இயேசு அல்லாஹ்வின் DNA  என்று நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், இது இஸ்லாமின் அடிப்படையை தகர்த்தெரிந்துவிடும் என்பதை கவனிக்கவும்.
கடைசியாக, பீஜே அவர்களே, உங்கள் விஞ்ஞானத்தை இன்னும் சோதிக்கப் போகிறேன்.  உங்களால் முடிந்தால், பதில்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.
உலகத்தின் ஞானிகளின் (தங்களை ஞானிகள் என்று எண்ணிக்கொள்பவர்களை) ஞானத்தை அடக்கும் படி, உலகத்தின் அஞ்ஞானிகளை (என்னைப்போல சாதாரண மனிதர்களை) பயன்படுத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
அன்பான இயேசுவே,  உம்முடைய உலக வாழ்வு பற்றிய சத்தியங்களை அறியாமல், தங்கள் கற்பனைகளை உலக மக்களுக்கு போதிக்கும் பீஜே போன்றவர்களுக்கு அறிவைத் தாரும். உம்மைப் பற்றி வாய்க்கு வந்தபடி பேசும் பீஜே அவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்ளட்டும். அவரையும், அவரது போதனைகளையும் கண்மூடித்தனமாக பின் பற்றும் முஸ்லிம்கள், சத்தியத்தை அறிந்துக்கொள்ள அவர்களுக்கு கேட்கக்கூடிய காதுகளையும்,  காணக்கூடிய கண்களையும், உணர்ந்துகொள்ளக்கூடிய இருதயத்தையும் தாரும்.  முஸ்லிம்கள் விடுதலையடையட்டும், மெய்த்தேவனாகிய உம்மை அறிந்துக்கொள்ளட்டும். ஆமென்.